Friday, 21 February 2014

காதல் எனப்படுவது யாதெனில்... 2

                           

அடுத்த ஒரு வாரம்  ட்ரைனிங் நல்லபடியாக போய் கொண்டிருந்தது. எனது பழைய கம்பனிக்கும்  இந்த கம்பனிக்கும்  பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் புதிதாக சில  விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்ததது. ஆனால் இந்த சுப்பிரமணி தான் என்னை ஒரு ப்ரெஷெர் மாதிரியே ட்ரீட் செய்து கொண்டு இருந்தார். எதாவது சந்தேகம் கேட்டால் "கூகிளில் தேடுங்க கார்த்திக்"  என சொல்லி சென்றார்.

"அப்புறம் நீங்க எதுக்கு இருக்கிங்க சார்" என கேட்க தோன்றியது.எப்படியோ "முடிஞ்சதுடா சாமி" என சொல்லும் அளவுக்கு ட்ரைனிங் முடிந்தது.

இப்போதெல்லாம் வேனில் போகும் வரும் போதும் தீபிகாவை சட்டை செய்யாதது போல் நக்கலாக ஒரு லுக் விட்டு டீஸ் செய்தேன். அவள் "ஸ்டுபிட்" என முனுமுனுத்துக்கொண்டே திரும்பி கொள்வாள்.
                                                    


தீபிகாவை சும்மா அழகான பொண்ணுன்னு மட்டும் சொல்லிட முடியாது. அவ ஒரு அழகான ராட்சஷிங்க. உடைகள் அணிவதில் அப்படி ஒரு நேர்த்தி. ஒவ்வொரு நாளும் கலக்கலாக வந்து அசத்துவாள். எனக்கே ஏன்டா இப்படி ஒரு பிகரை டீஸ் பண்ணுறோம்னு இருக்கும். இருந்ததாலும் முதல் நாள் நடந்த இன்சிடென்டை நினைத்து டீஸ் பண்ணித்தான் பார்ப்போமே என தோன்றும்.

வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே என்னுடைய டீமை சேர்ந்த ராகவன் நல்ல நண்பனாகிவிட்டான். அவனுடைய முழு பெயர் ராகவாச்சாரி
                           
                                                                                


      பார்க்க
அம்பி விக்ரம் போல் அடக்கமாக தெரிந்தாலும் கலாய்ப்பதில் அவனை அடித்துக்கொள்ள முடியாது. அவனும் நான் போகும் வேனிலேயே வருவதால் பொழுது போவதே தெரியாது.
கம்பனியில் கடந்த ஒரு வருடமாக அவன் வேலை செய்து வருவதால் தீபிகாவை பற்றி அவன் மூலம் நிறைய தெரிய வந்தது. "எத்தனையோ பசங்க அவள ஸைட் அடிக்கிறாங்க...  ஒருத்தனுக்கும் சிக்க மாட்டேங்குறாடா..." என புலம்பி தள்ளினான்.
               
அடுத்த வாரமே எங்கள் கம்பெனிக்கு ஒரு பெரிய ப்ராஜெக்ட் கிடைத்திருந்தது. அதன் ரிக்வைர்மென்ட் டிஸ்கஷன் ஏற்பாடு செய்து இருந்தார்கள். என் டீம் சார்பாக நானும் இன்னும் சிலரும் கலந்து கொண்டோம். டெஸ்டிங் டீம் சார்பாக தீபிகாவும் அவளது டீம் மேனேஜரும் கலந்து கொண்டனர்.

மீட்டிங்கில் அதிகம் சந்தேகம் கேட்டது தீபிகாதான். அது என்ன? இது என்ன? அதை அப்படி பண்ணலாமே, இதை இப்படி பண்ணலாமே என கேட்டு அதிகமாய் டெவலப்மென்ட் டீம்க்கு (எனக்கும் தான்) வேலை வைத்தாள். அவள் ஆங்கிலத்தில் சரளமாக பேசியதை கண்டு அசந்து போனேன்

அன்றய மீட்டிங் முடிந்து லேட்டாக ரூம் வந்து சேர்ந்தேன். ரூமில் சண்முகம் முல்த்தானி மட்டியை முகத்தில் அப்பிக்கொண்டு இருந்தார்.

"என்ன அண்ணே! மேக் அப் எல்லாம் பலமா இருக்கு?" 

அவர் அசடு வழிந்து கொண்டே "வரன் ஒன்னு வந்திருக்கு. இந்த வாரம் வெள்ளி கிழமை பொண்ணு பாக்க போறோம். நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன்" என்றார்.

"சூப்பர்னா! அப்போ சீக்கிரம் ட்ரீட் இருக்கு."

"ம். உனக்கு இல்லாமலா?" முகத்தை கழுவிக் கொண்டே சொன்னார்.
                             


"நான் அழகா இருக்கேனாடா?" நான் போன வாரம் அவரிடம் கேட்ட கேள்வியை என்னிடம் அவர் திரும்ப கேட்டார்.

"ஹ்ம்ம்! என் அளவுக்கு இல்ல. இருந்தாலும் பரவாயில்லண்ணா" என்று கலாய்த்தேன்.

"அடிங்கொய்யா" என சொல்லி அடிக்க வந்தவரிடம் பிடிபடாமல் எஸ்கேப் ஆனேன்.


அடுத்த சில தினங்கள் மீட்டிங், மீட்டிங் என்றே போய் கொண்டிருந்தது. அந்த மீட்டிங்களில் கூட பல தடவை தீபிகாவை பார்த்த போதும், இருவரும் பேசிக்கொண்டதில்லை.

ஆபிஸில் வேலைப்பளு அதிகமாகவே இருந்தது. டெலப்மென்ட் தொடங்கிவிட்டபடியால் நான் முழு நேரமும் நான் பிசியாகவே இருந்தேன். காலையில் சீக்கிரம் கிளம்புவது, இரவில் லேட்டாக வருவது என இருந்ததால் சண்முகம் அண்ணா ரூமில் இல்லாமல் இருந்தாலும் போர் அடிக்கவில்லை.

எப்படியோ வெள்ளிக்கிழமை வந்தது. காலையிலேயே பெண் பார்க்க செல்லும் சண்முகம் அண்ணனுக்கு "விஷ்" பண்ணிவிட்டு வேலைக்கு கிளம்பினேன். அன்று வேலை முடிவதற்கு கொஞ்சம் லேட் ஆனது. ராகவன் அன்று லீவ் என்பதால் செம போர் அடித்தது. இருக்கிற கடுப்பிற்கு இன்று கண்டிப்பாக சரக்கு அடிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். ரூம்க்கு செல்லும் போது என்னுடய பேவரைட் சரக்கான "ஷிவாஷ் ரீகல்" ஹாஃப் வாங்கி கொண்டேன்.

ரூமுக்கு 10 மணிக்கு சரக்குதான் வந்து சேர்ந்த போது சண்முகம் அண்ணா இருந்தததை பார்த்து ஆச்சரியமடைந்தேன்.

"என்னண்ணா! அதுக்குள்ள வந்துட்டீங்க? " என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

"மனசு சரி இல்லடா" என்றார். அதிலிருந்தே பெண் பார்க்க சென்றதன் ரிஸல்ட்டை தெரிந்து கொண்டேன்.

"கார்த்திக்!  இன்னைக்கு நான் உன்னோட சரக்கடிக்கலாமா?"  என்று கேட்டார்.

" அண்ணா! நீங்க சரக்கெல்லாம் அடிப்பீங்களா?" 

"ம். காலேஜ் டைமுல அடிச்சி இருக்கேன். அப்புறம் விட்டுட்டேன்." 

மது அவரது வலிக்கு மருந்தாக இருக்கும் என எண்ணினேன். இருவரும் சரக்கடிக்க ஆரம்பித்தோம்.

மூன்று ரவுண்ட் முடிந்த பிறகு "கார்த்திக்! என்ன பார்த்தா வயசானவன் மாதிரி தெரியுதா? என்று கேட்டார்.

"இல்லையேண்ணா. யார்  அப்டி சொன்னா?" என்று அவசரமாக மறுத்தேன்

"ஹும்ம்... பட் அந்த பொண்ணுக்கு அப்டித்தான் தெரிஞ்சிருப்பேன் போல இருக்கு" என்று கையில் வைத்திருந்த சரக்கை குடித்து முடித்தார்.

"நானும் காலேஜ் போற வரைக்கும் எல்லா பசங்கள மாதிரி சந்தோசமா, பல கனவோட இருந்தேன். பைனல் இயர் படிக்கும் போது அப்பா ஹார்ட் அட்டாக்கில இறந்துட்டார். அது எங்க குடும்பத்துல பேரிடியா இருந்துச்சு. அம்மா, ரெண்டு தங்கச்சிங்க, அவங்க படிப்பு, கல்யாணம்னு எல்லா பொறுப்பும் என் தலையில விழுந்துச்சு".

"கஷ்டப்பட்டு ரெண்டு தங்கச்சிகளயும் படிக்கவைச்சு நல்ல எடத்துல கல்யாணம் பண்ணி கொடுத்தேன். காலேஜ் படிக்கிறப்போ ஒரு பொண்ணு என்னை லவ்கூட பண்ணிச்சு. ஆனா பேமிலி சிச்சுவேஷன பார்த்துட்டு அதைகூட வேணாம்னு சொல்லிட்டேன். என்னோட கடமைகளை முடிக்கிறதுக்குள்ள வருஷம் ஓடிபோச்சு. இப்போ எனக்கு 32 வயசாயிடுச்சு. பொண்ணுங்களுக்கு மனசை விட அழகு தான் பெரிசாபடுதுல" என்று அவர் சொல்லியபோது அவர் கண்கள் கலங்கி இருந்தன.

எப்பொழுதும் என்னை கலாய்த்து கொண்டு, சிரித்து கொண்டிருக்கும் சண்முகம் அண்ணா கலங்கியதை பார்த்ததில்லை. அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றும் தெரிய வில்லை.

"விடுங்கண்ணா! அந்த பொண்ணுக்கு உங்கள பிடிக்கலன்னா லாஸ் அந்த பொண்ணுக்குத்தான். இந்த காலத்துல உங்கள மாதிரி நல்ல கேரக்டர் இருக்குற மாப்பிள்ளை கிடைக்கலையேன்னு அந்த பொண்ணு தான் ஃபீல் பண்ணனும். நீங்க வேணும்னா பாருங்க. அந்த பொண்ணுக்கு குடிகாரனா, பொம்பள பொறுக்கியா, மொள்ளமாறியா இருக்குறவனைதான் கட்டிக்கும்." என சரக்கு பாட்டில் மீது சத்தியம் செய்தேன்

"அப்டி எல்லாம் சொல்லாதடா. அந்த பொண்ணுக்கு புடிச்சது மாதிரியே புருஷன் அமையட்டும்" என்றார்

அவர் மேல் இருந்த மரியாதை இன்னும் கூடியது.

தொடரும்..